புதுச்சேரி, செப். 20: புதுச்சேரி அதிமுக சட்டசபை தலைவர் அன்பழகன் எம்எல்ஏ அளித்த பேட்டி: புதுச்சேரியில் திறந்தவெளி விளம்பர தடைச்சட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை ஒழுங்காக நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. அதிகாரிகள் தாங்களே எந்தெந்த இடத்தில் பேனர் வைக்கலாம் என்று முடிவு செய்கின்றனர். எனவே பேனர் தடைச்சட்டத்தில் கவர்னர் கிரண்பேடி தலையிட்டு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கவர்னர் கிரண்பேடியுடன் பல விஷயத்தில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் அவரின் தலையீடு அவசியமாகிறது. பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, பேனரை பிரிண்ட் செய்து தருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர்.