திருவில்லிபுத்தூர், செப். 19: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் உள்ள குன்றின் மீது சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள். இந்தாண்டு புரட்டாசி முதல் சனி வார விழா வரும் 21ம் தேதி துவங்குகிறது.
விசேஷ தினத்தன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.இந்நிலையில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து பணிகளும் திருவண்ணாமலை பெருமாள் கோயிலில் ஜரூராக நடந்து வருகிறது.