திருப்பூர், செப் 15: திருப்பூர் லக்கி நகர் பிரதான சாலையில் தார்சாலை அமைக்கப்படாமல் சேறும் சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லக்கி நகர் பகுதியில் சுமார் 1000 குடும்பங்கள் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பகுதியில் பின்னலாடை நிறுவனங்கள் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு பணிக்கு வரும் அனைவரும் இந்த ரோட்டை பயன்படுத்துகிறார்கள். மேலும் லக்கி நகர் வழியாக பல்வேறு பி.என் ரோட்டிற்கு செல்லும் வாகனங்களும் தினசரி சென்று வருகிறது. இந்நிலையில் லக்கி நகர் பிரதான சாலையில் முறையான தார்சாலை வசதிகள் இல்லாததால் அப்பகுதியில் உள்ள ரோடுகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த ரோடு வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.