செங்கம், செப்.11: செங்கம் அருகே மணல் கடத்தியவரை விரட்டிச்சென்றபோது கடத்தல்காரருடன் போலீஸ்காரர் கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் நேற்று அதிகாலை 3 மணியளவில் பாச்சல் கிராமத்தில் ரோந்து சென்றார். ஜீப்பை காவலர் சத்தியமூர்த்தி(32) ஓட்டி சென்றார். அப்போது, அவ்வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை, இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்தினார். போலீசை பார்த்தவுடன் மணல் கடத்தி வந்தவர், டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து, காவலர் சத்தியமூர்த்தி அவரை விரட்டிச் சென்றார். அப்போது, அங்கு சாலையோரத்தில் தண்ணீரின்றி வறண்டு இருந்த கிணற்றில் மணல் கடத்தியவரும், அவரை விரட்டிச் சென்ற காவலர் சத்தியமூர்த்தியும் அடுத்தடுத்து தவறி விழுந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் மலர், டிஎஸ்பி சின்ராஜூக்கு தகவல் தெரிவித்தார்.