திருப்பூர், செப். 10: திருப்பூரில், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த கோரி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு மனு அளித்தனர். திருப்பூரில், குடிநீர் விநியோகத்தை சீர்செய்ய கோரி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் வீணாம்பாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அனைவரும் ஆழ்குழாய் தண்ணீரை குடிக்க, குளிக்க மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில், கடந்த காலங்களில் பருவ மழை சரியாக பெய்யவில்லை. வெயில் தாக்கமும் அதிகளவில் இருந்தது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக ஆழ்குழாய் கிணறுகள் வற்றிவிட்டது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மக்கள் தங்களது தண்ணீர் தேவைக்காக பல கி.மீ., தூரம் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.