ஊட்டி, செப்.10:ஊட்டி-கூடலூர் சாலையில் பைன் பாரஸ்ட் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பைன் பாரஸ்ட் பகுதியை காணவும், பைன் பாரஸ்ட் நடுவே காணப்படும் காமராஜ் சாகர் அணையை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இங்குச் செல்லும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து சிலர் அங்கு குதிரைகளை கொண்டுச் சென்று சவாரிக்கு ஈடுபடுத்துகின்றனர். சுற்றுலா பயணிகள் வரும் நாட்களில் இவைகளை பயன்படுத்தும் உரிமையாளர்கள் மற்ற நாட்களில் அவைகளை அங்கே விட்டு விடுகின்றனர். இந்த குதிரைகள் எப்போதும் ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வலம் வருகின்றன.
சில சமயங்களில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு அவ்வழியாக செல்லும் வாகனங்களின் மீது விழுந்து கார்கள் சேதமடைகிறது. சில சமயங்களில் இரு சக்கர வாகனங்களின் மீது விழுவதால், பைக் மற்றும் ஸ்கூட்டர் போன்றவைகளில் செல்பவர்கள் விழுந்து விபத்து ஏற்படுகிறது. குதிரைகள் சாலைகளில் விடக்கூடாது, ஊட்டி நகரில் உள்ள தெருக்களில் விடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கடந்த இரு மாதங்களுக்கு முன் எச்சரித்தது.ஆனால், உரிமையாளர்கள் கண்டுக் கொள்ளாத நிலையில், தற்போது இச்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஊட்டி நகரில் மட்டுமின்றி, கூடலூர் சாலையில் பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம் போன்ற பகுதிகளில் உலா வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.