கரூர், செப். 10: கரூர் ராயனூர் பகவதியம்மன் கோயில் தெரு பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தை சொந்த கட்டிடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் நகரின் மையப்பகுதியில் உள்ள பகவதியம்மன் கோயில் தெரு பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வாடகை கட்டிடத்தில் கடந்த பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு வந்து உணவு சாப்பிட்டு பயின்று வருகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தண்ணீர் வசதியின்மை போன்ற அடிப்படை வசதிகளும் இந்த அங்கன்வாடி மையத்தில் இல்லாமல் உள்ளதால் பணியாளர்களும் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.