கும்பகோணம், செப். 10: விட்டலூர் சமுதாய குளத்தை தூர்வாராததால் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தை விரைந்து தூர்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் தாலுகா விட்டலூர் கிராமத்தில் சமுதாய குளம் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்குளத்தால் 500 ஏக்கர் விவசாய நிலம் பாசனத்துக்கு பயன்பட்டு வந்தது. இக்குளத்துக்கு காவிரியாற்றில் இருந்து பிரியும் நாட்டார் ஆறு மூலம் தண்ணீர் வந்து நிரம்பியவுடன் பாசனத்துக்கு செல்லும் வகையில் இருந்து வந்தது. இக்குளத்தை பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்ததாலும், குளத்துக்கு நீர் வரும் பாதை மற்றும் வெளியேறும் பாதைகள் ஆக்கிரமிப்பால் அடைத்து கொண்டதால் தண்ணீர் வராமல் போனது. இதனால் குளம் இருக்கும் தடமே மறைந்து போனது. இதனால் அக்கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து குளத்தை தூர்வார வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் மாவட்ட நி்ர்வாகம், குடிமராமத்து பணியின்கீழ் குளத்தை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது.