திருவண்ணாமலை, செப்.10: பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைத்து நடத்தும் ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான கண்காட்சி, அறிவியல் பெருவிழா மற்றும் கணித கருத்தரங்கம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,புதுடெல்லி தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கடிதத்தின்படி, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ர சிக்ஷா) இணைந்து அனைத்துப் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், அறிவியல் கண்காட்சியை பள்ளி அளவில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டம் அளவில் நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களை மாநில அளவில் அறிவியல் கண்காட்சி நடத்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை 'Science and Technology for Sustainable Development' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு படைப்புகளை தயாரித்து நடத்திட புதுடெல்லி, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்க செய்து, அவர்களின் சிறந்த படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க வழிவகை செய்திட வேண்டும்.