திருவண்ணாமலை, ஆக.20: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர்ந்து 3வது நாளாக பரவலான மழை பெய்தது. அதனால், நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குப்பனத்தம், செண்பகத்தோப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலான மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர்ந்து 3வது நாளாக மழை நீடித்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி, அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்தது. அதனால், மாவட்டத்தில் அதிகபட்சமாக சேத்துப்பட்டு தாலுகாவில் 76.40 மிமீ மழை பதிவானது. மேலும், தாலுகாவாரியாக ஆரணி 36 மிமீ, திருவண்ணாமலை 28.40 மிமீ, ஆரணி 35.20 மிமீ, செய்யாறு 18 மிமீ, செங்கம் 15.20 மிமீ, வந்தவாசி 64 மிமீ, போளூர் 28.20 மிமீ, தண்டராம்பட்டு 18 மிமீ, கலசபாக்கம் 47 மிமீ, சேத்துப்பட்டு 74.60 மிமீ, கீழ்பென்னாத்தூர் 21 மிமீ, வெம்பாக்கம் 49.20 மிமீ மழை பதிவானது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் 67.85 அடியாகவும், நீர்கொள்ளளவு 743 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழையில்லாத காரணத்தால், அணைக்கு நீர்வரத்து இதுவரை இல்லை.