கரூர்- திருச்சி புறவழி சாலையில் லாரிகள் பார்க்கிங்கால் போக்குவரத்து நெரிசல்

கரூர், ஆக. 14: திருச்சி புறவழிச்சாலையில் லாரி பார்க்கிங் காரணமாக நெரிசல் ஏற்படுகிறது.கரூர்- திருச்சி புறவழிச்சாலையில் வீரராக்கியம், வெங்கக்கல்பட்டி ஆகிய இடங்களில் அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. வெங்கக்கல்பட்டி அணுகுசாலை வழியாக கலெக்டர் அலுவலகம், தாந்தோணிமலை வந்து கரூருக்கு வரவேண்டிய வாகனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று கரூரில் இருந்து செல்ல வேண்டிய வாகனங்களும் சென்று கொண்டிருக்கிறது. மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அணுகுசாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அணுகு சாலை ஓரங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. கனரக வாகனங்களான லாரிகள் சாலையோரம் அதிக அளவில் நிற்பதால் அணுகு சாலைக்கு வரவேண்டிய வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன. போக்குவரத்து நெரிசலைப் போக்க லாரிகளை இந்த இடத்தில் பார்க்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். லாரிகளை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். அல்லது வேறு பகுதியில் நிறுத்தி வைக்க அறிவுரை கூறி போக்குவரத்து நெரிசலை போக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: