ஊட்டி, ஜூலை 24: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்ட மாற்றுதிறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாரூதின் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் 2019-20ம் கல்வியாண்டில் உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்ட மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமானது காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகான பரிந்துரை செய்யப்படும். இதன்படி ஊட்டி வட்டாரத்தில் வரும் 26ம் தேதி சாந்திவிஜய் துவக்க பள்ளியிலும், கூடலூர் வட்டாரத்தில் 29ம் தேதி வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் முகாம் நடக்கிறது. கோத்தகிரி வட்டாரத்தில் வரும் 30ம் தேதி கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், குன்னூர் வட்டாரத்தில் 31ம் தேதி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடக்கிறது. இதில் பெங்களூர் லிம்கோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உதவி உபகரணங்கள் தேவைப்படுபவர்களுக்கு அளவீட்டு முகாம் நடத்த உள்ளனர். மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் மூலம் தேசிய அடையாள அட்டையும் வழங்கப்பட உள்ளது. எனவே இம்முகாமில் மாற்று திறன்கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு நசாரூதின் தெரிவித்துள்ளார்.