சிவகிரி, ஜூலை 18: சிவகிரியில் அபாய நிலையில் இருந்த திறந்தவெளி கிணறுக்கு கம்பிவலை மூடி அமைக்கும் பணி, தினகரன் செய்தி எதிரொலியாக தொடங்கியுள்ளது. சிவகிரி பேரூராட்சி 8வது வார்டு கருங்குளம் வடக்குத்தெரு மையப்பகுதியில் பழமையான கிணறு உள்ளது. 50 ஆண்டுகாலமாக இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இக்கிணறு இருந்து வந்தது. சுமார் 25 அடி ஆழம், 5 அடி உயர சுற்றுச்சுவருடன் வட்டவடிவிலான இக்கிணறு, நாளடைவில் தெருவின் தரைத்தளம் உயர்ந்த காரணத்தால் சுற்றுச்சுவரின் உயரம் 1.5 அடி உயரமாக குறைந்தது.
மேலும் தண்ணீரும் வற்றி குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்டது. பாதுகாப்பின்றி திறந்தவெளியில் காணப்பட்ட இக்கிணற்றில் இதுவரை 3 குழந்தைகள் தவறி விழுந்து காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள இக்கிணற்றுக்கு கம்பிவலை மூடி அமைத்து மழைநீர் சேமிப்பு தொட்டியாக பயன்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாளைய கோரிக்கையாகும். இதுகுறித்து கடந்த 13ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.