ஊட்டி, ஜூலை 16: காந்திப்பேட்டை பகுதியில் மஞ்சள் நிறத்தில் பூத்துள்ள காகித பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பல வகையான செடிகள் காணப்படுகிறது. இவைகளில் காகித பூ என்று அழைக்கப்படும் ஹெலி கிரைசம் வகையை சேர்ந்த மலரும் ஒன்று. இந்த மலர் காடுகளில் வளரக்கூடியவை. இந்த மலர்கள் பல மாதங்களாக வாடாமல் இருக்கும். இதன் இதழ்களை தொட்டால் காகிதம் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இதனால், நீலகிரி மாவட்டத்தில் இதை காகித பூ என மக்கள் அழைக்கின்றனர். இந்த மலர்கள் காடுகளில் அதிகளவு கிடைப்பதால், இதை பறித்து வந்து தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உட்பட சுற்றுலா தலங்களில் சாலையோரங்களில் சிலர் வைத்து விற்பனை செய்கின்றனர்.