ராஜபாளையம்/சாத்தூர், ஜூலை 16: காமராஜர் பிறந்தநாள் விழா விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ராஜபாளையம் அருகே முகவூர் ஊராட்சியில் உள்ள காமராஜர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முகவூர் தெற்குதெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். பள்ளி செயலாளர் முத்துராஜ், தலைமை ஆசிரியர் அறச்செல்வி, பேரூர் செயலாளர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் தொந்தியப்பன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மேலும் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கும் எம்எல்ஏ தங்கபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.