புதுச்சேரி, ஜூலை 16: புதுவை சேதராப்பட்டு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் துத்திப்பட்டு தனியார் பேப்பர் கம்பெனி அருகே கண்காணிப்பு மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் வீச்சரிவாளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கிருமாம்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்த புகழேந்தி என்ற புகழ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கத்தியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.