புதுச்சேரி, ஜூன் 27: புதுச்சேரி நலவழித்துறை மற்றும் லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து தேசிய மலேரியா நோய் எதிர்ப்பு மாத நிகழ்ச்சியை லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியில் நடத்தின. டாக்டர் சிவபிரசன்னா வரவேற்றார். மலேரியா துணை இயக்குநர் டாக்டர் கணேசன், தேசிய பூச்சியியல் நோய் தடுப்பு திட்ட அதிகாரி டாக்டர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில்நுட்ப உதவியாளர் செந்தில்வேலவன், மலேரியா நோய் பற்றி விளக்க உரையாற்றினார். சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், களப்பணியாளர்கள், ஆஷா உதவியாளர்கள் இணைந்து நரிக்குறவர்கள் பகுதிகளில் சுற்றுப்புறங்களில் தூய்மை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உழவர்கரை நகராட்சி உதவி பொறியாளர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்களும் இணைந்து பணியாற்றினர். புதுவை குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மருத்துவ அதிகாரி நிர்மல்குமார் தலைமை தாங்கினார். ஹோமியோபதி டாக்டர் உசஸ், பள்ளி துணை முதல்வர் சித்ரா, சுகாதார ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் வரவேற்றார்.