திருப்பூர், ஜூன் 26: ‘‘முகநூல் மற்றும் செல்போன்களில் நேரத்தை செலவிட்டு பெற்றோர்களை தயவு செய்து ஏமாற்றாதீர்கள்,’’ என கல்லூரி மாணவிகளுக்கு, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அறிவுரை கூறினார்.திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, சர்வதேச நீதிப்பணி மற்றும் விழுதுகள் அமைப்பு சார்பில், ‘மனித கடத்தலுக்கு எதிரான மன்றம்’ துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்றார். சர்வதேச நீதிப்பணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாலமன் ஆண்டனி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கந்தசாமி பிரபு, விழுதுகள் அமைப்பின் இயக்குனர் தங்கவேலு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் பேசியதாவது: குழந்தைகளையும், பெண்களையும் விருப்பமின்றி அழைத்து செல்வது, கொத்தடிமையாக நடத்துவது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, வீட்டு வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துவது பல இடங்களில் நடந்து வருகிறது. ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களை கட்டாயப்படுத்தினால் அது கடத்தல் தான். இதுபோன்ற செயல்களை ஒரு தனிநபர் மட்டும் செய்ய முடியாது. ஒரு கும்பல் ஒருங்கிணைந்து செய்வார்கள். வெளிநாட்டுக்கு சென்றால் வேலை கிடைக்கும் என்று பொய் சொல்லி பெண்களை அழைத்து சென்று, பாலியல் தொழிலில் சிக்க வைத்துவிடுவார்கள். இதுபோன்று பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மனித உரிமையை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி, அவர்களை எந்த வேலையிலும் ஈடுபடுத்தக்கூடாது. தலைமுறை, தலைமுறையாக சிலர் ஒருவரிடம் மட்டுமே வேலை செய்து வருவார்கள் அது கொத்தடிமை முறையாகும். வாங்கியதை விட உழைப்பை அதிகம் சுரண்டுவது தான் கொத்தடிமை முறையாகும். இதில் இருந்து சாதாரணமாக யாரும் மீள முடியாது. காரணம் வாங்கிய கடனை எப்போதும் கட்ட முடியாத நிலை உருவாகி விடும். கொத்தடிமை முறை மிகவும் கொடுமையானது.