கூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்

புதுச்சேரி, ஜூன் 26:  புதுவையில் கூடுதல் விடுப்பை ஈடுகட்டும் வகையில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுவையில் மக்களவை தேர்தலையொட்டி இந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு முன்பே கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், கோடை வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு மேலும் ஒருவாரம் கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு அறிவித்தபடி ஜூன் 10ம் தேதி அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகள் மட்டும் 12ம் தேதி பள்ளிகளை திறந்தன. இதனிடையே கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்ட காலத்திற்கான பணி நாட்களை ஈடுசெய்யும் வகையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 4 நாட்கள் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  அதன்படி ஜூலை 6, 20ம் தேதி, ஆகஸ்ட் 3ம் தேதி, 24ம் தேதி ஆகிய நாட்களில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் குப்புசாமி அறிவித்துள்ளார்.

Related Stories: