பாடாலூர், ஜூன் 25: பாடாலூர் அருகே உள்ள காரை கிராமத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் 50க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டமாக வசித்து வருகிறது. நேற்று காலை அந்த ஏரி பகுதியில் ஒரு மான், நாய் கடித்த நிலையில் உயிருக்கு போராடி வந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், அந்த மானை தூக்கி வந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அந்த மான், வனத்துறையினர் வருவதற்கு முன்பு இறந்து விட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வனக்காப்பாளர் திருநாவுக்கரசு, மான் உடலை மீட்டு செட்டிகுளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். இறந்துபோன ஆண் மானுக்கு 2 வயதிருக்கும் என்று கூறப்படுகிறது.