தேனி, ஜூன் 21: தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகே முல்லையாறு உள்ளது. இந்த ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடும்போது வரும் நீர் தடுப்பணையின் ஒரு புறம் தேங்கி அதில் இருந்து வழிந்து விழும் அழகை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். தடுப்பணையின் தண்ணீர் தேங்கும் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சுமார் 3 உறைகிணறுகள் உள்ளன. இப்பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. இதனையறியாமல் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்கும்போது ஆபத்தான பள்ளங்களில் விழுந்து உயிரிழந்து விடுகின்றனர்.