திருமங்கலம், ஜூன் 21: காய்கறி வாங்க சென்றால் நம்மில் பலர் கடையில் கொசுறாக அதாவது இலவசமாக மல்லியை வாங்காமல் திரும்புவது கிடையாது. பல காய்கறி கடைகளில் கடைக்காரர்களே நாம் கேட்காமல் மல்லியை நமக்கு இலவச இணைப்பாக தந்து அனுப்புவர். அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மல்லிக்கு தற்போது சோதனை காலம் போல். தற்போது கிலோ 200 முதல் 250 வரையில் விற்பனையாகிறது. திருமங்கலம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் எதிர்பாராத அளவிற்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இயற்கை வளம் நிறைந்த நெல்லை மாவட்டம் குற்றாலம், தென்காசியில் போதுமான மழை இல்லாததால் மல்லி வரத்து இல்லை. ஓசூரில் மழை பொழிவு அதிகரித்ததால் மல்லி செடிகள் வாடி விட்டது. இருப்பினும் தற்போது ஓசூரில் இருந்துதான் மல்லி வருகிறது. தென்காசி பகுதியில் மல்லி விளைச்சல் அதிகரித்தால் தட்டுப்பாடு நீங்கும். அதற்கு இன்னும் ஓரிருமாதங்கள் காத்திருக்க வேண்டும்.