பழநி, ஜூன் 21: பழநியில் திரவ உயிர் உற்பத்தி மையத்தை மத்திய வேளாண் முதன்மை செயலாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட இக்கிராமங்களில் காய்கறிகள், பழங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. ஆனால், இருப்பு வைத்து விற்பனை செய்ய குளிர்பதன கிட்டங்கி வசதி இல்லாததால் காய்கறிகள், பழங்களை ஒரே நேரத்தில் விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியநிலை ஏற்பட்டது. இதனால் விற்பனை சந்தைகளில் எதிர்பார்த்த விலை கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக விவசாயிகள், பழநியில் குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக பழநி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார் சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார். இதன் பயனாக பழநியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகப்பிரிவின் கீழ் சுமார் ரூ.13 கோடி மதிப்பீட்டில் நவீன முறையிலான திரவ உயிர் உற்பத்தி மையம், காய்கறி மற்றும் பழங்களுக்கான குளிர்பதன கிட்டங்கி, மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது.