நாமக்கல், ஜூன் 19: நாமக்கல் அருகே உள்ள கிராமங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது.இதனால், பொதுமக்கள் குடிநீருக்கு தவியாய்,தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நாமக்கல் அருகே முத்துகாப்பட்டியில் அனைத்து குடியிருப்புகளிலும் ஊராட்சி சார்பில், குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த ஊராட்சிக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இந்த ஊராட்சியில் குறிப்பிட்ட சில பகுதி மக்களின் குடிநீர் தாகத்தை ஊராட்சி நிர்வாகத்தால் தீர்க்கமுடியவில்லை.இதனால், சாலைகளில் செல்லும் குடிநீர் திட்ட உடைந்த குழாய்களில் இருந்து வெளியேறும் கலங்கலான நீரை பெண்கள் குடங்களில் சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.முத்துகாப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே இரண்டு இடங்களில் கடந்த 4 நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.அதில் இருந்து வெளியேறும் தண்ணீரை பெண்கள் கொஞ்சம், கொஞ்சமாக சேகரிக்கிறார்கள்.இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி கூறுகையில், கடந்த 4 ஆண்டாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. ஒரு குடம் தண்ணீர் 7 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். தண்ணீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.