வீரவநல்லூர், ஜூன் 19: வீரவநல்லூர் அருகே பத்தல்மேடு கிராமத்திற்கு செல்லும் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பாப்பாக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அரிகேசவநல்லூர் ஊராட்சியில் தாழையடிகாலனி, பத்தல்மேடு, தென்திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் இப்பகுதி மக்கள் குண்டும் குழியுமான சாலையால் தினந்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இப்பகுதியிலிருந்து பொதுமக்கள் முக்கூடல் சந்தை, மத்திய அரசின் பீடி தொழிலாளர்கள் நல மருத்துவமனை, பள்ளிகூடம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கூடலுக்கு வருவதற்கு இந்த ஒருவழிப்பாதையே உள்ளது. கிரியம்மாள்புரத்திலிருந்து முக்கூடல் ஆற்றுப்பாலம் வரை சுமார் 2 கி.மீட்டர் தூரம் இச்சாலையானது படு மோசமான நிலையில் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட இந்த சாலையானது தற்போது குண்டும் குழியுமாகி நடக்ககூட லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட உடனே வரமுடியாத நிலை உள்ளது. சாலை மோசமாக உள்ளதால் பள்ளி வேன்களும் குழந்தைகளை ஏற்றி செல்வதில் சிரமப்பட்டு வருகிறது. மேலும் சாலையின் இருபுறமும் வயல்வெளிகள் உள்ளதால் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் வாகனத்தை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது.