வத்திராயிருப்பு, ஜூன் 18: வத்திராயிருப்பு அருகே, ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் உள்ள சக்கம்மாள் தெருவில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதால், பெண்கள் அவதிப்படுகின்றனர். வத்திராயிருப்பு அருகே, ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் உள்ள சக்கம்மாள் கோயில் தெருவில் 100க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் ஒரே ஒரு குடிநீர் தொட்டி மட்டும் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அப்போது ஒரு குடும்பத்திற்கு ஒரு குடம் மட்டுமே கிடைப்பதால், தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி மூலம் இரண்டு குழாய்கள் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களுக்கு போர்வெல் அமைத்து இணைப்பு கொடுத்தால், தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என்கின்றனர்.