புதுச்சேரி, ஜூன் 18: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இயக்குநர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாசிக் உழவரகங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கு உண்டான மறைமுக உத்தரவும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுவையில் 1986ம் ஆண்டு வேளாண்துறையால் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் அனைத்தும் மானியத்தில் வழங்குவதற்காக பாசிக் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு வந்த இந்நிறுவனத்தில் ஆட்கள் திணிப்பு, நிர்வாக சீர்கேடு போன்ற காரணங்களால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இப்பிரச்னைகளை சரி செய்து பாசிக் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தாமல், அதனை மூடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேளாண்துறையே செய்து வருகிறது. முதலில் கம்போஸ்ட் (உரம்) உற்பத்தி செய்வதை நிறுத்தியது. பின்னர் மினரல் வாட்டர் உற்பத்தியை நிறுத்தியது. தற்போது பாசிக் உழவரகங்களை மூட முடிவு செய்துள்ளது. இதற்காக ஆரம்பம் முதலே துறை உயர் அதிகாரிகள் தீவிரமாக செயல்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் வேளாண் துறை இயக்குநகரத்தில் வேளாண் இயக்குநர் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் வேளாண் இயக்குநர்கள், இணை வேளாண் இயக்குநர்கள், துணை வேளாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், நடப்பாண்டு வேளாண்துறை எந்த இடுபொருட்களையும் பாசிக் மூலமாக மானியத்தில் வழங்காது என்றும், விவசாயிகள் இடுபொருட்களை வெளியில் வாங்கி கொண்டு அதற்குண்டான பில்லை இணைத்து விண்ணப்பித்தால் மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற கொள்கை முடிவை அரசு ஒப்பு கொண்டதாகவும், அதற்குண்டான நிர்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளதாகவும் வேளாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அரசு வழங்கிய நிர்வாக ஒப்புதலின் நகலை அதிகாரிகளிடம் வழங்கி, அதன் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்துமாறும் உத்தரவிட்டார்.