புதுச்சேரி, ஜூன் 18: கடலூர் மாவட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்த சுருக்கு வலைகளை மீட்டு தர வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சரிடம் மீனவர்கள் முறையிட்டனர். அப்போது, புதுவையிலும் சுருக்கு வலைக்கு தடை விதிக்கப்படுவது தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார்.நாடு முழுவதும் சுருக்கு வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் மீனவர்கள் சுருக்கு வலை பயன்படுத்த தடை விதிக்கப்படவில்லை. இதனால் 85 சதவீத மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். அண்டை மாநிலமான தமிழகத்தில் சுருக்கு வலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடைக்காலம் முடிந்து, கடலில் மீன்பிடிப்பதற்காக புதுவை மீனவர்கள் சுருக்கு வலையை கடலுக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, தமிழக அதிகாரிகள் சுருக்கு வலையை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் புதுவை சட்டசபையில் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவை மீனவர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது, கடலூரில் தமிழக அதிகாரிகள் பறிமுதல் செய்த 3 சுருக்கு வலைகளை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதிலளித்து பேசியதாவது: நாடு முழுவதும் சுருக்கு வலையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு ஒவ்வொரு மாநிலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுருக்கு வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் தடை இருப்பதால் புதுவையிலும் தடை விதிப்பதை தவிர்க்க முடியாது.