பலத்த காற்று, அதிகளவில் ரசாயன உரம் இடுவதால் வயல்களில் சாய்ந்து வரும் 3,000 ஏக்கர் கோடை நெற்பயிர்

கும்பகோணம், ஜூன் 18: பலத்த காற்று, அதிகளவில் ரசாயன உரம் இடுவதால் கும்பகோணம் பகுதியில் உள்ள வயல்களில் 3,000 ஏக்கர் கோடை நெற்பயிர் சாய்ந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் அளவில் நடவு செய்யப்பட்ட கோடை நெற்பயிர் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்த கோடைப்பயிர் முழுவதும் மின்மோட்டார் உதவியுடன் அதிசய பொன்னிரக நெல்களை கடந்த ஏப்ரல் மாதம் நடவு செய்தனர்.இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் அதிசய பொன்னிரக நெற்கதிர்கள் வயலில் சாய்ந்துவிட்டது. மேலும் அதிக மகசூல் பெற வேண்டும் என்பதற்காக அதிகமான ரசாயனத்தை தெளித்ததால் அனைத்து பயிர்களும் வளர்ந்து கதிர்களின் எடை தாங்காமல் வயலில் சாய்ந்து விட்டது.கடந்த காலங்களில் இயற்கை உரமான சாணம், சாம்பல், இலைகள், காட்டாமணக்கு செடிகள், சணப்பு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர்களை உற்பத்தி செய்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக போதுமான தண்ணீர் இல்லாததால் விளைச்சல் குறைந்தது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், விளைச்சலை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக ரசாயன உரத்தை பயன்படுத்துகின்றனர்.இயற்கை உரத்தால் நெற்கதிர்கள் அதிகமான நெல்மணிகள் இருந்தாலும், வளையாமல், சாயாமல் இருந்து வந்தது. அதற்கு போதுமான சத்துகள் இயற்கை உரம் தந்தது. ஆனால் ரசாயன உரத்தால் நெற்கதிர்களில் போதுமான சத்துக்கள் இல்லாமல் குறைந்தளவே உள்ள நெல்மணிகள் இருந்தாலும் சாய்ந்து விடுகிறது.மேலும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்வதால் வயலில் சாய்ந்துள்ள நெற்கதிர்கள் அமுங்கிவிடும். இதனால் நெற்கதிர்களில் உள்ள நெல்கள் பதராகி விடும். இந்நிலையில் ரசாயன உரத்தால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்று விவசாயிகள் ஈடுபட்டால் வருங்காலத்தில் சந்ததியினருக்கு போதுமான சத்துள்ள அரிசிகள் கிடைக்காமல் வெறும் வயிற்றை நிரப்பும் ஒரு பொருளாக அரிசி மாறிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: