காரைக்குடி, ஜூன் 12: கடும் வெயில், பருவ மழை பொய்த்து விட்டதால் தோட்டக்கலைப் பயிர்கள் கருகி வருவதோடு, புதுவிதமான பூச்சி தாக்குதலுக்கு உட்பட்டு விளைச்சலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் பொதுப்பணித் துறை மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்டு 500க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. சுமார் 5 ஆயிரத்து 500 எக்டேர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இவற்றில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே நெல் பயிரிடப்படுகிறது. மற்ற நிலங்களில் கத்தரி, மிளகாய், பாகற்காய், பூசணி, வெண்டைக்காய், முள்ளங்கி உள்பட பல்வேறு தோட்டக்கலை பயிர்கள், பயிர் செய்யப்படுகிறது. இப்பகுதியில் கண்மாய், கிணறு மற்றும் போர்வெல் பாசனத்தை நம்பி பயிர் செய்யப்படுகிறது. பெய்ய வேண்டிய பருவமழை பெய்யாததால் சாக்கோட்டை பகுதிகளில் உள்ள அனைத்து கண்மாய்களும் வறண்டு காணப்படுகிறது. மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் இல்லை. இந்த ஒன்றியத்தில் பெரியகோட்டை, பெத்தாச்சிகுடியிருப்பு, சிறுகப்பட்டி, மித்ராவயல், புளியங்குடியிருப்பு, முள்ளங்காடு உட்பட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் கத்தரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இவைகள் மதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, கொத்தமங்கலம், தேவகோட்டை, பள்ளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.