தேனி, ஜூன் 12: தேனி வாரச்சந்தை எதிரே பெரியகுளம் சாலையின் இருபுறமும் கடை அமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெருவோர கடைக்காரர்கள் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தேனியில் வாரந்தோறும் சனிக்கிழமை பெரியகுளம் சாலையில் வாரச்சந்தை கூடுகிறது. நகராட்சி மூலமாக நடத்தப்படும் இந்த வாரச்சந்தையில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் மளிகை, வீட்டு உபயோக சாமான்கள், காய்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கோழி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்கின்றனர். வாரச்சந்தைக்காக ஒதுக்கப்பட்ட இடம்சாலையின் மேற்கு புறம் அமைந்துள்ளது. வாரச்சந்தைக்கு வெளியே தேனி-பெரியகுளம் மெயின்சாலையின் இருபுறமும் வாரச்சந்தையன்று சுமார் 100க்கும் அதிகமான சாலையோர கடைகள் அமைக்கப்படுகின்றன.