போடியில் கஞ்சா விற்றவர்கள் கைது

போடி, செப். 21: தேனி மாவட்டம் போடி ரெட்டை வாய்க்கால் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போடி நகர காவல் நிலைய எஸ்.ஐ விஜயராமன் மற்றும் போலீசார் ரெட்டைவாய்க்கால் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கட்டைப் பைகளுடன் 3 நபர்கள் நின்றிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் கட்டைப் பைகளை சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் போடி நந்தவனம் தெருவை சேர்ந்த குருசாமி (51), கீழத்தெருவை சேர்ந்த பாண்டி (45), போடி அருகே கோடாங்கிபட்டி திருச்செந்தூர் கிழக்கு காலனியை சேர்ந்த பெரிய கருப்பன் (56) என்பதும், குருசாமி கஞ்சாவை மொத்தமாக வாங்கிவந்து, மற்ற இருவரின் உதவியுடன் பொட்டலங்களாக பார்சல் செய்து விற்றுவந்ததும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து போடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போடியில் கஞ்சா விற்றவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: