பழநி, ஜூன் 12:தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பணி புரிந்து வரும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க கடந்த வாரம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 25 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பரிசு பெறும் ஊழியர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை ஏதும் பெற்றிருத்தல் கூடாது. தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பணிமுறிவு ஏதுமின்றி பணிபுரிந்திருக்க வேண்டும். முதன்மை கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் அந்த கோயிலில் இருந்து மட்டுமே ரொக்கப்பரிசினை பெற முடியும். பகுதி நேர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், பணித்தொகுதியில் இல்லாத தொகுப்பூதிய பணியாளர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது.முதுநிலை கோயில் பணியாளர்களுக்கு ஆணையரிடமும், முதுநிலை இல்லாத கோயில் பணியாளர்களுக்கு அந்தந்த மண்டல இணை ஆணையரிடமும் முன்மொழிவு அனுப்பி அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை திருக்கோயில் நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட கோயில் பணியாளர்களின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.