சேதுபாவாசத்திரம், ஜூன் 11: சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 4 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் வீடுகளில் இருந்து நகை, பணம், உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது. சேதுபாவாசத்திரம் அடுத்த செந்தலைவயல் கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு சாகுல் ஹமீது (28) என்பவரின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென அருகில் உள்ள ராவுத்தர் (30) என்பவரின் ஓட்டு வீட்டுக்கு பரவியது. இதில் அவரது வீட்டில் இருந்த சிலிண்டர் தீப்பிடித்து வெடித்து சிதறியது. அங்கிருந்து கிளம்பிய தீப்பொறி பட்டு அவரது சகோதரர் கபூர் (26) மற்றும் சிக்கந்தர் என்பவரின் கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கந்தரின் வாய்பேச இயலாத மனைவி சாயிராபேகத்தை அக்கம்பக்கத்தினர் காயமின்றி மீட்டனர்.