சென்னை, ஜூன் 11: புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமதாஸ்(பாமக நிறுவனர்): ஜானகிராமன் அரசியலைக் கடந்து என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். எனக்கு நல்ல நண்பர். ஜானகிராமனின் மறைவு அவரைச் சார்ந்தவர்களுக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திமுகவினருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வைகோ(மதிமுக பொது செயலாளர்): கடுமையான உழைப்பினாலும், சிறந்த அணுகுமுறையாலும், திமுக வளச்சிக்கும், புதுவை மாநில வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றி மறைந்துள்ள ஜானகிராமனை இழந்து துயருற்று இருக்கும் திமுகவினருக்கும், அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஜானகிராமன் இறுதி நிகழ்வில் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், புதுவை மாநில அமைப்பாளர் கபிரியேல் மற்றும் மதிமுகவினரும் சென்று பங்கேற்பார்கள்.