சிங்கம்புணரி, ஜூன் 11: சிங்கம்புணரி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேத்தான்காடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பிரச்சனை உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே ஊராட்சி நிர்வாகம் குடிதண்ணீர் வழங்குவதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இரண்டு நாட்கள் மோட்டார் ஓடினாலும் அரை தொட்டி அளவு மட்டுமே தண்ணீர் சேமிக்க முடிகிறது. மேலும் அப்பகுதியில் 800 அடி வரை போர்வெல் போட்டும் தண்ணீர் இல்லை. எனவே எங்கள் பகுதியையும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைத்து தண்ணீர் வழங்க வேண்டும். உடனடியாக தகுந்த இடத்தில் போர்வெல் அமைத்து தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.