வாழப்பாடி, ஜூன் 11: வாழப்பாடி அருகே பயணிகளை ஸ்டாப்பில் இறக்கி விடாத தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் இருந்து காரிப்பட்டி செல்வதற்காக, நேற்று மதியம் 2 பயணிகள் தனியார் பஸ்சில் ஏறினர். அப்போது, கண்டக்டர் காரிப்பட்டிக்கு பஸ் செல்லாது, தேசிய நெடுஞ்சாலை வழியாகவே சென்றுவிடும் என கூறி, அவர்களை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளார். இதுகுறித்து, பயணிகள் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த தனியார் பஸ் சேலத்திலிருந்து ஆத்தூர் நோக்கி செல்லும்போது, காரிப்பட்டி போலீஸ் ஸ்டேசன் எதிரே, பொதுமக்கள் திரண்டு அந்த பஸ்சை சிறைபிடித்து கண்டக்டர், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த காரிப்பட்டி போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பஸ்சை விடுவித்தனர்.