சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால்துறை நடத்தும் புகைப்பட போட்டி...

சேலம், ஜூன் 11: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தபால்துறை சார்பில் இந்திய அளவில் புகைப்பட போட்டி நடத்தப்படுகிறது. இதில் முதல் பரிசாக ₹50 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை, சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் புகைப்பட போட்டி நடத்துகிறது. அதில், “நவீன இந்தியாவில் காந்தியின் பாரம்பரியம்’’ என்ற தலைப்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்ப வேண்டும். இந்த போட்டியில் அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம். புகைப்படம் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். இதற்கு முன்பாக வேறு எந்த அச்சு, மின்னணு ஊடகத்திலும் பிரசுரிக்கப்படாமல் இருத்தல் வேண்டும்.

சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ₹50 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ₹25 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ₹10 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 5 பேருக்கு ₹5 ஆயிரமும் வழங்கப்படும்.  இந்த போட்டிக்கான விதிமுறைகளை, இந்திய அஞ்சல் துறையின் வலைதளமான www.indiapost.gov.in என்ற முகவரிக்கு சென்று பார்த்துக் கொள்ளலாம். புகைப்படங்களை சிடியில் வரும் 30ம் தேதிக்குள் விரைவு தபாலில், ஏடிஜி (அஞ்சல்தலை பிரிவு), அறை எண் 108, தக் பவன், பாராளுமன்றம் தெரு, நியூ டெல்லி-110001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் முஜிப் பாட்சா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: