திண்டுக்கல், ஜூன் 11: டூவீலர்களில் செல்லும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களது டூவீலர்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சக்திவேல் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து போலீசாரும் பணி நிமித்தம் மற்றும் சொந்த வேலையாக டூவீலர்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தினமும் நடைபெறும் அணிவகுப்பின் போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் போலீசார் ஒரு சிலர் பணிக்கு செல்லும் போதும், சொந்த வேலையாக செல்லும் போதும் ஹெல்மெட் அணியாமல் சென்று வருவதாக தெரியவருகிறது. இனிவரும் காலங்களில் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டி வரும் போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிந்து, அவர்களது டூவீலர்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சக்திவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.