பழநி, ஜூன் 5: பள்ளிகளில் 12 மணி நேரத்திற்கு மேல் வகுப்புகள் நடத்தப்படுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் காலங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இச்செயல் முழுவீச்சில் நடைபெறுகிறது. பழநியில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பிற்கு காலை 7 மணிக்கு சென்று விட்டு மாலை 7 மணிக்கு வீடு திரும்பும் நிலை நிலவுகிறது. தவிர, குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது என பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை மூளைச்சலவை செய்து விடுகிறது.