புதுச்சேரி, ஜூன் 4: முதலியார்பேட்டையில் உள்ள புதுச்சேரி நகராட்சி அலுவலக வாயில் முன்பு ஆட்டோக்களின் ஆக்கிரமிப்புகளால் வரிசெலுத்த வரும் பொதுமக்கள் நுழைவு வாயிலை அடைத்தபடி வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் அவலம் உள்ளது. முதலியார்பேட்டை கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில், புதுச்சேரி நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிறப்பு- இறப்பு சான்றிதழ் விநியோகம் மற்றும் வீட்டுவரி, குப்பை வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பொதுமக்கள் தினமும் அதிகளவில் அங்கு வந்துசெல்வது வழக்கம். அவ்வாறு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது வாகனங்களை அங்கு நிறுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் தடை செய்து அதற்கான அறிவிப்பு பலகையை நுழைவு வாயிலில் வைத்துள்ளது. இதையடுத்து வரிசெலுத்த வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை உள்ளே நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நுழைவு வாயில் முன்பு சாலையோரம் நிறுத்த முயன்றால் அதற்கும் ஆட்டோ டிரைவர்களால் மிரட்டல் பாணியில் தடை போடப்படுகிறது. அங்கு ஆட்டோ ஸ்டாண்ட் பெயரில் சிலர் ஆட்டோக்களை நுழைவு வாயிலின் இருபுறமும் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.