செங்கோட்டை, மே 30: தென்காசி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் தனுஷ்குமார் எம்.பி., செங்கோட்டையில் வீதிவீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தென்காசி மக்களவைத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தனுஷ்குமார், 1.20 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதற்கான சான்றிதழை பெற்றதும் சென்னை சென்ற அவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். பின்னர் அங்கு நடந்த திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார். பின்னர் ஊர் திரும்பிய தனுஷ்குமார் எம்.பி., வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறி வருகிறார். இதையொட்டி செங்கோட்டை வந்த அவர், நகர திமுக செயலாளர் ரஹீம் தலைமையில் வீதிவீதியாக திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடுவேன்’’ என்றார்.