கீழப்பாவூரில் சகோதரியின் மாமியாரை வெட்டிய வாலிபர் கைது

பாவூர்சத்திரம், மே 30: கீழப்பாவூரில் சகோதரியின் மாமியாரை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆலங்குளம் ஒன்றியம், லட்சுமியூர் வேளாளர் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் சுரேஷ் (24). மும்பையில் வேலை பார்த்து வரும் இவர், விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இதனிடையே இவரது அக்காள் சரோஜாவுக்கும் (26),  கீழப்பாவூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகப்பாண்டி-  பூபதி (52) தம்பதியரின் மகனும், வள்ளியூரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருபவருமான சண்முகநாதன் (31) என்பவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகு கூட்டு குடும்பமாக வசித்துவந்தபோது சரோஜாவுக்கும், மாமியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அத்துடன் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கணவனை அடிக்கடி கட்டாயப்படுத்தினாராம். இதுதொடர்பாக கணவருடன் ஏற்பட்ட தகராறில் சரோஜா, தாய் வீட்டிற்கு திரும்பியதோடு அங்கேயே பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனிடையே சண்முகநாதனின் தங்கைக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.  இதுகுறித்து தெரியவந்ததும்  கீழப்பாவூரில் உள்ள சண்முகநாதன் வீட்டிற்கு சென்ற சுரேஷ், அங்கிருந்த சண்முகநாதனின் தாய் பூபதியிடம் (52) தகராறு செய்ததோடு தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த பூபதி தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பாவூர்சத்திரம் போலீசார், சுரேசை கைது செய்தனர்.

Related Stories: