சேலம் மே 29: சேலம் மாவட்டத்தில் தேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் சாதித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரியா நாட்டு கலைகளில் ஒன்றான தேக்வாண்டோ விளையாட்டு போட்டி 10 சதவீதம் கையாலும், 90சதவீதம் கால்களாலும் விளையாடிய கூடிய ஒன்றாக திகழ்கிறது. தேக்வாண்டோ விளையாட்டு சப் ஜூனியர்(8-12), ஜூனியர்(12-14), கேடட்(14-17), சீனியர்(17 மேல் வரை) என்ற 4பிரிவுகளிலும், எடை பிரிவிலும் நடக்கிறது. இதில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேக்வாண்டோ போட்டிகளில் அதிகளவில் சாதித்து வருகின்றனர். சேலம் காந்தி ஸ்டேடியத்தில் சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதற்காக பயிற்சி பெற்று வருகிறார்கள். இப்படி பயிற்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மாவட்ட அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகிறார்கள். அதே நேரத்தில் ஏழ்மை காரணமாக பெரும்பாலான மாணவர்கள், தொடர்ந்து பயிற்சிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.