தேனி, மே 29: தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட காமன்கல்லூர் கிராமத்தினர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அளித்த மனுவில், ‘‘காமன்கல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் ரவிச்சந்திரன். இவர்மீது பள்ளி மாணவியர்களை பாலியல் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் மாணவியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். இவ்வழக்கு தேனி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தலைமை ஆசிரியரின் செல்வாக்கால் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, காவல்நிலையத்தில் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை போலீசார் தவறான வழக்கு என பதிவு செய்துள்ளனர். இதனை ஆதாரமாக கொண்டு தலைமை ஆசிரியர் காமன்கல்லூர் பள்ளியில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.