காரைக்குடி, மே 29: காரைக்குடியில் பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாவட்டத்தின் முக்கிய நகராட்சிகளில் ஒன்று. இங்கு பல்கலைக்கழகம், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் என கல்வி நிறுவனங்களும், வெளி நாட்டு பார்வையாளர்களை கவரும் செட்டி நாட்டு பங்களாக்களும் அதிகம். காரைக்குடி நகராட்சி மொத்தம் 36 வார்டுகளையும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையையும் கொண்ட நகரம்.
இங்குள்ள முக்கிய சாலைகளான செக்காலை ரோடு, வஊசி சாலை, செக்காலை வாட்டர் டேங் ஒன்று முதல் மூன்று வீதிகள், சுப்பிரமணியபுரம் முதல் வீதி, நா.புதூர் சாலை என அனைத்து சாலைகளும் வாகன ஓட்டிகளை பல்லாங்குழி ஆட வைத்து பதம் பார்க்கும் சாலைகளாகவே உள்ளன. காரைக்குடி செக்காலை 1ம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பேருந்து நிலையத்துக்கு செல்கின்றன. இந்த சாலையை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதே கிடையாது. சில நேரங்களில் மக்கள் போராட்டம் செய்யபோவதாக அறிவித்தால் கண்துடைப்புக்காக இங்கொன்றும் அங்கொன்றுமாக பேஜ் ஒர்க் மட்டுமே செய்து முடித்துவிடுவதாகவும் மக்களிடம் குற்றச்சாட்டு உள்ளது. தற்போது பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் எப்போது, எந்த சாலையில் பாதாளச்சாக்கடை குழிகள் மூடாமல் திறந்து கிடக்கின்றன என கண்காணித்துக்கொண்டே செல்லவேண்டியுள்ளது.