புதுச்சேரி, மே 29: புதுவை வேல்ராம்பேட் ஏரிக்கரை அருகே பைனான்சியரை அடைத்து வைத்து தாக்கிய கும்பல் மீது 5 பிரிவுகளின் கீழ் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுவை லாஸ்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (37). பைனான்சியரான இவரை பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் சம்பவத்தன்று ஒரு கும்பல் வேல்ராம்பேட் ஏரிக்கரை அருகிலுள்ள கேள் டிவி அலுவலகத்துக்குள் அடைத்து வைத்து இரும்பு பைப், கேபிள் வயர் உள்ளிட்டவற்றால் தாக்கி மிரட்டியது. இது தொடர்பாக அவரது தொழில் பார்ட்னரான வில்லியனூர், மணவெளி ராஜாவுக்கு சபாிநாதன் தகவல் தெரிவித்து ரூ.10 லட்சம் கேட்டு தன்னை ஒரு கும்பல் தாக்குவதாக தெரிவித்தார். இதையடுத்து சபரிநாதன் மனைவியுடன் லாஸ்பேட்டை காவல் நிலையம் சென்ற ராஜா, கடத்தல் தொடர்பாக புகார் கொடுத்தார். லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிந்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை பிடிக்க 100 அடி ரோட்டில் தயாராக இருந்தனர். போலீசுக்கு சென்ற தகவல் தெரிய வரவே, சபரிநாதனை திடீரென விடுவித்துவிட்டு கும்பல் தலைமறைவானது.