ஆத்தூர், மே 28: ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் ஏரியின் உபரிநீர் வசிஷ்ட நதியை அடைந்து, அங்கிருந்து கடலுக்கு சென்று வீணாக கலக்கிறது. முட்டல் ஏரியின் உபரிநீரை வாய்க்கால் அமைத்து, கல்லாநத்தம் ஏரிக்கு கொண்டு வந்தால் கல்லாநத்தம், துலுக்கனூர், அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுவதோடு, ஆத்தூர் டவுன் உள்ளிட்ட கிராமப்புறங்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மேலும், ஆத்தூர் கல்லாநத்தம், துலுக்கனூர், அம்மம்பாளையம்,காட்டுக்கோட்டை வரையிலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இதையடுத்து, முட்டல் ஏரியிலிருந்து கல்லாநத்தம் ஏரிக்கு வனப்பகுதியையொட்டியுள்ள பகுதியில் பழைய வாய்க்காலை புதுப்பிக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் நடவடிக்கை எடுத்தனர். தங்களது சொந்த செலவில், சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் அமைக்கப்பட்ட நிலையில், திடீரென ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.