பாபநாசம், மே 25: அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பயிர்களுக்கு இடும் ரசாயன உரங்கள் மண்ணில் பல்வேறு வகையான வேதி மாற்றங்கள் அடைந்த பின்னரே பயிர்களால் எடுத்து கொள்ளப்படுகின்றன. இவ்வாறு வேதி மாற்றமடைய மட்கு சத்து உரங்கள் மிகுதியான அளவில் மண்ணில் இருக்க வேண்டும். ஆனால் மாறி வரும் காலச்சூழலில் தேவையான அளவு குப்பை எரு, தழை எரு, பசுந்தாள் உரங்களை மண்ணில் இட முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் அதிக பொருட்செலவில் வாங்கி பயன்படுத்தும் ரசாயன உரங்கள் முழுமையாக பயிர்கள் எடுத்து கொண்டு பலனளிக்க இயலாத நிலை உள்ளது. இதனால் இடும் உரங்களுக்கேற்ற அளவு மகசூல் கிடைப்பதில் பிரச்னை உருவாகிறது. இக்குறைகளை போக்கி மண்ணை வளப்படுத்தி இடும் உரங்களை முழுமையாக பயிர்கள் எடுத்து கொள்ள செய்பவை தான் உயிர் உரங்கள். நெல், உளுந்து, பயறு, கடலை, எள், பருத்தி ஆகிய பயிர்களுக்கு ஏற்ற பல்வேறு வகையான உயிர் உரங்கள் கிடைக்கின்றன.