காரைக்கால், மே 25: கோடைக்காலத்தையொட்டி, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், குடிநீர் குழாய்களில் மின்மோட்டாரை பொருத்தி நீரை உறிஞ்சக்கூடாது எனவும், மாவட்ட நிர்வாகமும், கொம்யூன் பஞ்சாயத்தும் அறிவுறுத்தியிருந்தது. இந்த அறிவுறுத்தலைமீறி, திருநள்ளாறு தொகுதியில் பலர் குடிநீர் குழாய்களில் மின் மோட்டாரை பொருத்தி நீரை உறிஞ்சி வருவதாக, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார்கள் சென்றது. தொடர்ந்து, திருநள்ளாறு சேத்தூர், காமாட்சி நகர் பகுதியிலிருந்து வந்த புகாரின் அடிப்படையில், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக 8 வீடுகளில் உயர்திறன் கொண்ட மின்மோட்டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சியது தெரியவந்தது. இந்த மின்மோட்டார்களை கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.